சில நேரங்களில்..

ஒரு தொலை இயக்கியின் கதை...
ஒரு சுபயோக சுபதினத்தில் எனது வீட்டில் இருக்கின்ற தொலை காட்சிப் பெட்டியை இயக்கச் செய்கின்ற தொலை இயக்கியின் செயல்பாடு நின்று விட்டது. தொலை இயக்கியின் உயிர் போன்ற மின்சார குளிகை (பாட்டரிக்கு வேறு ஏதாவது தமிழ்ச் சொல் இருக்கின்றதா ? ) இரண்டையும் மாற்றிப் பார்த்த பின்பும் செயல்பட வில்லை. என்னவென்று சொல்வது.. தொலைக் கட்சிப் பெட்டி அருகினில் சென்று ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக்கொண்டிருக்கப் பொறுமை இல்லை. எனது குழந்தை செய்வதைப் போன்று கீழே தரையில் டொக் டொக் என்று தட்டியும் பார்த்தாகி விட்டது. ஒன்றும் பிரயோஜனமில்லை. வேறு வழியின்றி எழுந்து சென்று தொலைக் கட்சிப் பெட்டி அருகில் நின்று ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டியதாகி விட்டது. எனினும் இந்த விஷயத்தில் சில நன்மைகளும் இருக்கின்றன. அவை கீழ்கண்டவாறு..
  • நிமிடத்திற்கு ஒருமுறை அலைவரிசை மாற்றப்படுவதில்லை.
  • தொலைக் காட்சிப் பெட்டியிலேயே கண்கள் நிலை குத்திகொண்டிருக்கும் அவலம் இல்லை.
  • எழுந்து சென்று அலைவரிசை மாற்றி மாற்றி, பின் மீண்டும் இருக்கையில் அமர்ந்து பார்க்கின்ற பொறுமை இழந்து, வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடிகின்றது.
  • அலைவரிசை மாற்றப் படுவதனால் உண்டாகக்கூடிய செல்லச் சண்டைகள் பெருமளவு குறைந்து விடுகின்றது. (வேறு காரணங்களால் வருவதற்கு தொலை இயக்கி பொறுப்பாகாது)
  • இதைப் பற்றி ஒரு வலைப்பூ எழுதுகின்ற ஒரு வாய்ப்பும் கிடைக்கின்றது.

நன்மைகள் பெருமளவு இருப்பதனால், இந்த நிகழ்வினை வரவேற்போமாக !!!

சில நேரங்களில்.. (ஆம் , கவிதை தான் !!! நம்புங்கள்...!!!)

சில நேரம் சிலவை ரசிக்கத் தோன்றும்.
எது நேரம் என்பெல்லாம் பொருட்டல்ல.. (அதற்கு )
அணுவேனும் அதிசயிக்க ஆசை போதும் !!
விட்டத்தில் சுற்றுகின்ற மின்விசிறி..
கிட்டத்தில் இருந்தும் (கண்களுக்கு) தெரியா இளந்தென்றல்..
சாளரத்தில் நடனமிடும் திரைச்சீலை.. (என )
அனைத்திற்கும் பொதுவான காற்றதனை
கண்டதில்லை எனும்போதும் சுவாசிக்கின்றோம் !!
புத்திக்கு புலப்படாமல் இவை போன்று,
எத்தனையோ காட்சியுண்டு ..கதையுமுண்டு.
அத்தனையும் தெரிந்திருக்க நியாயம் இல்லை..
தெரிந்து கொள்ள முயன்று விட நேரமில்லை.
முடிந்த வரை தெரிந்ததனை எண்ணிப் பார்த்து,
இரசித்திருப்போம், மகிழ்ந்திருப்போம், சில நேரத்தில் !!! (சில நேரம்).

பி . கு. அடிகோடிட்ட முதல் மூன்று அடிகளை நான் எழுதிய வருடம் 1997. மீதி வரிகள்கடந்த பத்து நிமிடங்களில் இயற்றி எழுதி முடிக்கப்பட்டவை ஆகும்.

Comments

Popular posts from this blog

Mumbai Train Blast and A Letter to Terrorist..

What Next..?

A True Story on Determination